Archives

பெண்கள் ஷெய்குமார்களின் கைகளை முத்தமிடுவது கூடுமா?

(ஆக்கம் : முஹம்மத்  ஹனிப்  (குலசேகர பட்டினம்), http://www.mailofislam.com)

இது ஒரு சிறு விளக்கம் தான். இந்த விளக்கத்தை கொண்டு ஹராமாக்கபட்டதை ஹலாலாக்குவது எமது நோக்கமல்ல. மார்க்கத்தை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.

பெண்கள் முஹப்பத்திற்காகவும், மரியாதைக்காகவும் ஆன்மீக தந்தைகளான ஷெய்குமார்களின் கைகளை முத்தமிடுவதை இன்று ஒரு சில ஸுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் நடமாடும் ஒரு சில போலிகள், போட்டோ, வீடியோவில் பதிவு செய்துக்கொண்டு ஷெய்குமார்களை பற்றி தவறாக விமர்சித்துக் கொண்டு திரிகிறார்கள்.

முத்தமிடுவது பற்றி இரண்டு வகையாக கூறலாம்.

  1. ஒன்று இச்சையோடு முத்தமிடுவது.
  2. மற்றொன்று முஹப்பத்தோடு முத்தமிடுவது.

ஒரு தாய் குழந்தையை முத்தமிடுவது இச்சையோடு சேராது. ஆனால் இச்சையோடு ஒரு தாய் குழந்தையை முத்தமிடுவது ஹராமாகும்.

ஒரு தாய் குழந்தையை முத்தமிடுவது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் அனுமதிக்கப்பட்ட விசயமாகும்.

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை முத்தமிடுவதைக் கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ”எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை” என்று சொன்னார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், ”விஷயம் தெரியுமா? கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் 4637

காமிலான ஷெய்குமார்கள் என்பவர்கள் தங்களின் உள்ளத்தை தூய்மைப்படுத்தி, இச்சையை அகற்றி அல்லாஹ்வுடன் தன்னை ஒன்றிணைத்து கொள்கிறார்கள். ஆகவே ஷெய்குமார்கள் கையை முத்தமிடுவது இச்சைக்கு அப்பாற்பட்ட விசயமாகும்.

இவ்வாறு இச்சையோடு பெண்கள் கைகளை முத்தமிடுவதை ஷெய்குமார்களும் விரும்பமாட்டார்கள். ஒரு ஆணாக இருந்தாலும் ஷெய்குமார்களின் கைகளை இச்சையோடு முத்தமிடுவதும் ஹராமாகும்

எந்தவொரு ஆணும் எந்தவொரு பெண்ணும் இச்சையோடு ஷெய்குமார்களின் கையை முத்தமிடுவதில்லை. முஹப்பத்திற்காக, மரியாதைக்காக தான் முத்தமிடுகிறார்கள்.

* ஹழ்ரத் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் ஆட்சி காலத்தில் வயது முதிர்ந்த பெண்ணுக்கு (கை குலுக்கி) கைலாகு செய்து உள்ளார்கள்.

* ஹழ்ரத் உம்மு ஹரம் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் தலைமுடியை வாரி விடுபவர்களாக இருந்தார்கள். (புகாரி)

* ஹழ்ரத் மூஸா அல் அஷ்ஷரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஹ்ராம் இருக்கும் நிலையில் அஷ்ஷரீயா குலத்தை சேர்த்த பெண் அவர்களின் தலைமுடியை சீவி விட்டார்கள். (புகாரி)

 (நன்றி: பத்வா – தாருல் இப்தா, எகிப்து)

“வயது முதிர்ந்த பெண்களுக்கு கைகொடுத்து கை குலுக்கலாம்” என்று ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபி, ஹன்பலி மத்ஹபுகளின் சட்டங்கள் கூறுகின்றது.

அதன் அடிப்படையில்தான் தங்களுடைய ஆன்மீக தந்தை என்ற எண்ணத்தில்தான் வயது முதிர்ந்த ஆன்மீக ஆசிரியரின் கைகளை முத்தமிடுகிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் பார்க்காமல், மார்க்கம் தெரியாமல், ஹதீஸ்களை பார்க்காமல் கெட்டெண்ணம் படைத்த கேடுகெட்டவர்கள் தங்களை போல மற்றவர்களையும் எண்ணி, ஷெய்குமார்களை அவதூறு சொல்வதே இவர்களின் தொழிலாக மாறிவிட்டது. இவர்கள் அவதூறு பரப்பி அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் பரம்பரையில் இருந்து வரும் அஹ்லுல் பைத்துக்கள் மீது அளவு கடந்த முஹப்பத்தை வெளிப்படுத்துவதற்காக தான் இவர்கள் முத்தமிடுகிறார்கள்.

இவ்வாறு முஹப்பத்து வருகிற அளவுக்கு நாம் நேசிக்க வேண்டுமா?

ஸாதாத்துமார்களை (அஹ்லுல் பைத்துக்களை) பின்பற்றுவதும், மற்றும் நேசிப்பது ஈமானில் ஒரு பகுதியாகும்.

  1. மேலும் முஃமின்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்தி வைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது சுற்றத்தார்களாகிய அஹ்லு பைத்துக்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். (அல்குர்ஆன் ஷூரா:23)
  1. எவன் கை வசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டுக் கூறுகிறேன். எவர் அஹ்லு பைத்துக்களாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும் அவன் ரஸூலுக்காகவும் பிரியம் வைக்கவில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.

(திர்மிதி, மிஷ்காத் 570

  1. அல்லாஹ்வின் அன்பைப் பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள் எனது அன்பைப் பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.

திர்மிதி, மிஷ்காத் 573

  1. எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். அஹ்லுபைத்துக்களே நம்மை எவராவது கோபப்படுத்தி விட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைந்து விடுவான்.

முஸ்தத்ரக் 3-150

  1. உங்களில் குழைந்தைகளுக்கு மூன்று விஷயங்களில் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீப் ஓதி வருதல் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

தைலமீ – நூருல் யகீன்

ஷெய்குமார்களின் கைகளை எந்த எண்ணத்தில் முத்தமிடுகிறார்கள் என்று அல்லாஹ்வும் அவனுடய தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் மட்டுமே அறிவார்கள்.

ஷாலிஹான ஷெய்குமார்களுக்கும் தூய்மையான எண்ணத்துடன் கூடிய முஹப்பத்தைக் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விளக்கத்தை பதிவு செய்து இருக்கிறேன். அசுத்த எண்ணங்கள் கொண்டவர்களுக்கு இல்லை.

ஷெய்குமார்களை பற்றி தரைக்குறைவாக விமர்சிப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.

எந்த ஷெய்குமார்களும் பெண்களிடம் பைஅத் செய்யும் போது முத்தமிட வற்புறுத்துவதில்லை. தவறுதலாகவும் எதிர்பாராமலும் பெண்கள் முஹப்பத்தை நாடி தங்களின் ஆன்மீக தந்தை என்ற எண்ணத்தில் ஷெய்குமார்களின் கைகளை முத்தமிடுகிறார்கள்.

ஷெய்குமார்களில் அநேகர்கள் விலாயத்தை பெற்றவர்களாக இருப்பார்கள். யார் என்ன என்று தெரியாமல் பிறர் சொன்னதை சரி என்று எண்ணி உண்மையை ஆராயாமல் ஷெய்குமார்களை தவறாக விமர்சிப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்

யார் எனது வலியை பகைத்துக் கொள்கிறார்களோ அவனுடன் நான் யுத்தப் பிரகடனம் செய்கிறேன் என்று அல்லாஹ் குறிப்பிட்டதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்.

ஹதீஸ் குத்ஸி – புகாரி

ஆகவே  இறைநேசர்களை விமர்சிப்பவர்கள் அல்லாஹ்வுடன் யுத்தம் செய்ய தயாராகிக்  கொள்ளுங்கள்.